ADVERTISEMENT

‘பதவி கேட்பதற்கு செத்துபோயிடலாம்’;ஓரங்கட்டிய பிரதமர் - அதிர்ச்சியில் முக்கிய புள்ளி

11:01 AM Dec 14, 2023 | ArunPrakash

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடைப்பெற்றது. அங்கு, 230 சட்ட போரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குபதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் வேட்பாளராக யாரையும் முன் நிறுத்தாமல், கர்நாடக சட்டமன்ற தேர்தல் பாணியில் பிரதமர் மோடியை முன் வைத்து தேர்தலில் களம் இறங்கியது. தேர்தல் முடிவில், 230 தொகுதிகளில் 163 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வென்று இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்தது. அதனை தொடர்ந்து யார் அடுத்த முதல்வர்? என கட்சிக்குள்ளேயே இழுபறி நிலவியது.

ADVERTISEMENT

அடுத்து மீண்டும் முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகானே தொடர்வார் என அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த போட்டியில், நரேந்திர தோமர், பிரஹலாத் படேல் போன்ற மூத்த தலைவர்களின் பெயரும் இருந்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, அடுத்த முதல்வர் இவர் தான், என பல பெயர்களை முன்னணி ஊடகங்கள் வெளியிட்டன. இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி பாஜக கட்சியின் எம்.எல்.ஏ கூட்டம் நடப்பெற்றது. யாரும் எதிர்பாராத திருப்பு முனையாக, பரிந்துரையிலேயே இல்லாத நபராக உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ மோகன் யாதவ், அடுத்த மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, மாநிலத்தில் இந்த முறை இரண்டு துணை முதல்வர்கள் என, ஜெகதீஷ் தியோரா மற்றும் ராஜேந்திர சுக்லா இருப்பார்கள் என அறிவிப்பு வெளியானது. மேலும், சட்டப்பேரவை சபாநாயகராக கட்சியின் மூத்த உறுப்பினர் நரேந்திர சிங் தோமர் இருப்பர் என முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்புகளை சிவ்ராஜ் சிங் சவுகான் எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார். கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட புதிய முதல்வர் மோகன் யாதவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால், கூட்டம் முடிந்த பிறகு சிவராஜ் சிங், ஊடகங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல நழுவி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வேறு வழியின்றி சிவராஜ் சிங் சவுகான் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து, புதியதாக பொறுப்பேற்றுள்ள மோகன் யாதவ் மாநில ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இந்த முடிவு மத்திய பிரதேச பிஜேபி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் வளர்ந்து வந்தவர். இதனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கிடைத்துள்ளது. இவர், 2018ம் ஆண்டு இரண்டாவது முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே, மாநிலத்தின் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்றார். அதன், பிறகு ஆர்.எஸ்.எஸ் செல்வாக்குடன், மாநிலத்தின் முதவர் பதவிக்கு வந்து விட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிகின்றனர்.

ஆனால், நீண்ட காலம் பாஜகவில் முதல்வர் பதவியை வகித்த பெருமையை கொண்ட சிவராஜ் சிங் சவுகான், தனி பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார் என்பதற்காக வேண்டுமென்றே பிஜேபியின் தலைமை பதவியை பறித்துள்ளது. இதனை சொந்த கட்சியே செய்யலாமா? என போர்க்கொடி தூக்குகின்றனர் சிவராஜ் சிங் சவுகான் ஆதரவாளர்கள். மேலும், சமூக வலைத்தளங்களிலும், "மேற்கை ஏற்காதே.. வீழும் சூரியனே.. தார்மம் தோற்காதே.. ஆளும் காவலனே.. "என சிவராஜ் சிங் சவுகானுக்கு அதரவாக பல பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி, முதல்வர் பதவியில் இருந்து விலகிய சிவராஜ் சிங் சவுகானை, அவரது வீட்டில் சந்தித்த பெண் தொண்டர்கள், திடீரென்று அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். தொண்டர்களின் தலையில் கைவைத்து ஆசுவாசப்படுத்திய முன்னாள் முதல்வர், "எனக்காக பதவி கேட்பதை விட செத்துப்போவது மேல். கட்சி எனக்கு எந்த பணியை கொடுத்தாலும் நான் செய்ய காத்திருக்கிறேன். இதனை, தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன். ஒருவர் சுயநலமாக இருக்கும்போது, ​​அவர் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார். ஆனால் பாஜவில் ஒவ்வொரு ஊழியருக்கும் சில வேலை இருக்கிறது. எனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் நான் செய்வேன். எனக்கு எந்த அநீதியும் இழைக்கவில்லை. சாதாரண தொண்டனான நான், 16 ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளேன். இதை விட வேறு என்ன வேண்டும்" என கூறிக்கொண்டே அங்கிருந்த பெண் தொண்டர்களை ஆசுவாசப்படுத்தினார்.

மேலும் பேசிய அவர், ''செடி நடுதல் என்பது எனக்கு பிடித்தமான விஷயம். புதிய முதல்வர் டாக்டர் மோகன் யாதவிடம் நான் கேட்பது ஒன்றுதான், நான் செடி நடுவதற்கு அரசு நிலத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்" என கோரிக்கை வைத்தார். மத்திய பிரதேச அரசியலில் சிவராஜ் சிங் சவுகான் ஒதுக்கப்பட்டதற்கு காரணம், "அவரின் மீது காங்கிரஸ் கட்சியினர் 'போன் பே 50% கமிஷன்' என்று மத்திய பிரதேசம் முழுவதும் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டியது. சிறுபான்மையினருக்கு எதிரான புல்டோசர் கலாச்சாரம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுகள் குவிந்தது போன்றவை, அவருக்கு எதிர்வினையாக மாறிவிட்டது. பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வைத்து, எதிர்க்கட்சிகள் ஓபிசி பிரதிநிதித்துவ பிரச்சனையை எழுப்பின. புதியதாக தேர்வு செய்த முதல்வரும் ஓபிசி பிரிவினர் என்பதால், இந்த நியமனத்தை பகடைக்காயாக வைத்து பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் பா.ஜ.க கட்சி காய் நகர்த்தியுள்ளது" என அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், முதல்வராக தேர்வாகிய பின் பேசிய மோகன் யாதவ், "என்னைப் போன்ற சிறிய தலைவருக்கு, பொறுப்பு வழங்கிய மத்திய, மாநில தலைமைக்கு நன்றி. இதுதான் பாரதிய ஜனதா கட்சி. இந்த பொறுப்பிற்கு நான் தகுதியானவன் இல்லை. என்றாலும் உங்கள் அன்பும், ஆசியும், ஆதரவும் கிடைத்தால், கண்டிப்பாக சாதிக்க, முடிந்த வரை முயற்சி செய்வேன். மீண்டும் நன்றி" என உற்சாகமாக பேசினார்.

பிஜேபியின் புதிய அரசியல் யுக்தி, மத்திய பிரதேச பாஜக அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT