செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே கடும் மோதல் நிகழ்ந்தது. பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் தொடர் பதிலடியால் இறந்த வீரர்களின் உடலை எடுக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவத்தினர் திணறியுள்ளனர். பின்னர் அந்நாட்டு ராணுவத்தினர் வெள்ளை கொடியுடன் எல்லைப்பகுதிக்குள் வந்து இறந்த ராணுவ வீரர்களின் உடலை எடுத்து சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதேபோல கடந்த ஜூலை மாதம் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். அப்போது வெள்ளை கொடியுடன் வந்து உடலை எடுத்துசெல்லுமாறு இந்திய ராணுவம் தெரிவித்தது. ஆனால் அவர்களது உடல்களை பெற்றுக் கொள்ள பாகிஸ்தான் மறுத்து விட்டது. மேலும் அவர்கள் தங்கள் நாட்டு வீரர்கள் இல்லை எனவும் கூறியது. இந்த நிலையில் 13 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக்கொடியுடன் வந்து இறந்தவரின் உடலை எடுத்த சென்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.