நிர்பயா விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 9ஆம் தேதி மகளிர் தின சிறப்பு விழாவாக நிர்பயா விருது வழங்கும் விழா பெங்களூருவில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட நிர்பயாவின் பெற்றோர், முன்னாள் அமைச்சரும் மற்றும் முன்னாள் காவல்துறை ஆணையருமான சங்லியானா, ஐ.ஜி.பி. டி.ரூபா, சமூக செயற்பாட்டாளர் அனிதா செரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக குரல்கொடுக்கும் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களுக்கு நிர்பயா விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்டு விருது வழங்கிய முன்னாள் அமைச்சர் சங்லியானா, ‘நிர்பயாவின் தாயாரைப் பார்க்கிறேன். அவருக்கே இவ்வளவு அழகான உடற்கட்டு இருக்கும்போது, நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்’ என அனைவரும் முகம்சுழிக்கும் விதமாக பேசினார். மேலும், ‘பாலியல் வன்முறையில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், பின்னர் வழக்கு தொடரவேண்டும். இதன்மூலம் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்’ என சர்ச்சைக்குரிய கருத்தையும் பகிர்ந்தார். அவரது இந்தக் கருத்து விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.