கேரளாவின் பாப்பனங்கோடு என்ஜினீயரிங் கல்லூரியில் 2004-ம் ஆண்டு பி.டெக். முடித்த பிரவீன் கிருஷ்ணன் நாயர், ரஞ்சித் குமார் ஆகியோர் டெல்லியில் தங்களது கல்லூரி நண்பர்களோடு நடந்த ரீயூனியன் நிகழ்வில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்த விழாவை முடித்த நிலையில், பிரவீன்-சரண்யா தம்பதியின் மூன்று குழந்தைகளும் ஜனவரி மாதம் பிறந்தவர்கள் என்பதால், அவர்களின் பிறந்தநாளை கொண்டாட நேபால் செல்ல திட்டமிட்டு பிரவீன்-சரண்யா தம்பதி மற்றும் ரஞ்சித் குமார் - இந்து லட்சுமி தம்பதியினரும் மற்ற சில நண்பர்களும் நேபால் சென்றுள்ளனர்.
காத்மாண்டுவில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள டாமன் பகுதியில் ஒரு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். குளிர் பிரதேசம் என்பதால் இரவு நேரத்தில் குழந்தைகள் குளிரால் கஷ்டப்பட்டனர் என விடுதி நிர்வாகத்திடம் கியாஸ் ஹீட்டர் ஒன்றை வாங்கி வந்து அறையில் வைத்துள்ளனர். இரவு நேரத்தில் அதில் ஏற்பட்ட வாயு கசிவால் குழந்தைகள் உட்பட 8 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். விடுதி ஊழியர்கள் மறுநாள் காலை இவர்கள் மயங்கி கிடப்பதை பார்த்து காவல்துறை மற்றும் மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 8 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டனர் என கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இவர்களது உடல்கள் இன்று கேரளா கொண்டுவரப்பட உள்ளன. குழந்தைகளின் பிறந்த நாளுக்காக நேபால் சென்ற குடும்பத்தினர் 8 பேர் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.