கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகத் தமிழிசை சவுந்தர்ராஜன் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். மேலும் புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி ராஜினாமா செய்ததை அடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளார். மேலும் ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தனது தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், “எனது தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று நான் சந்தேகிக்கிறேன். எனது தனியுரிமையில் தலையிடுகின்றனர். இரண்டு நாட்கள் முன்பு எனது முன்னாள் பாதுகாவலர் துஷார் தீபாவளி வாழ்த்து சொன்னதிலிருந்து எனது தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சந்தேகம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது. தேவையில்லாமல் ஆளுநர் மாளிகையைக் குற்றம் சாட்டி பேசுகின்றனர்” எனக் கூறினார்.