Skip to main content

ராஜ்யசபா எம்.பி ஆகிறாரா பிரகாஷ் ராஜ்?

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

ts cm chandrasekhar rao selected prakash raj Rajya Sabha mp

 

திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார். இவர் நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வரும் பிரகாஷ் ராஜ் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும்  கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். 

 

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு  ராஜ்யசபா எம்.பி சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ்  தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 7 ராஜ்யசபா எம்.பி பதவிகளுமே, ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியிடமே உள்ளது. இதில் தற்போது ராஜ்யசபாவில் எம்.பி களாக இருக்கும் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகிய  இருவரது பதவிகளும் வரும் ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், இந்த இரண்டு எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். இதன் வாயிலாக பிரகாஷ் ராஜுக்கு எம்.பி சீட் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக விமர்சனத்தை வைத்து வரும் நிலையில், தெலுங்கானாவில் இருந்து பிரகாஷ் ராஜை ராஜ்யசபா எம்.பி ஆக்கினால் கட்சியின் பலம் கூடும் என சந்திரசேகர ராவ் நினைப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ் ஏற்கனவே நடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மாற்றத்திற்காக வாக்களித்தேன்” - பிரகாஷ் ராஜ்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
prakash raj voted his vote in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது ரொம்ப முக்கியமான விஷயம். நீங்க தேர்ந்தெடுக்க போறவங்க தான் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு பண்ண போறவங்க. உங்களுடைய குரல் அங்கு எழுப்பனும்னா ஓட்டு போடுங்க. நீங்க ஓட்டு போடலைன்னா, நீங்க கேள்வி கேட்கிற தகுதியும் அந்த உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், அவர்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார். 

இதனிடையே அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர், “மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்தேன். நான் நம்பும் மற்றும் என்னுடைய குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யும் வேட்பாளருக்கு வாக்களித்தேன்” என்றார். 

Next Story

“மலிவான உரை” - பிரதமரின் பேச்சுக்கு பிரகாஷ் ராஜ் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Prakash Raj condemns pm modi spech

18ஆவது நாடாளுமன்ற தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என பேசினார். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டித் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “அவமானம்... இந்த மலிவான உரையை வரலாறு ஆவணப்படுத்தும்; பிரதமர் மோடி வெறும் அதிகாரத்திற்கு ஆசைப்படுபவராக இருக்கிறார்; முதற்கட்ட வாக்குப்பதிவு அவரை உலுக்கியுள்ளது; காத்திருங்கள், மக்கள் அவருக்கு பாடம் கற்பிப்பார்கள்” என பதிவிட்டுள்ளார்.