இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் 56.21% பங்குகள் ஜப்பான் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்பரேஷன் வசம் உள்ளது. இந்தியாவில் மட்டும் மூன்று உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. குர்கோனில் இரண்டு, குஜராத்தில் ஒன்று என மூன்று உற்பத்தி தொழிற்சாலைகளில் வருடத்துக்கு பதினேழு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 1500 நகரங்களில் விற்பனையகங்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 12 ரகங்களில் கார்களை உற்பத்தி செய்கிறது. அதில் 8வது ரகமாக 'ஸ்விப்ட்'டையும் , 9வது ரகமாய் டிசையரும் வெளியிட்டது. ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள்தான் இதன் முக்கிய போட்டியாளர்கள்.
மாருதி சுஸுகி நிறுவனம் தனது புதிய 1279 கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து தானாக திரும்பப் பெறுவதாக 25 ஜூலை 2018 அன்று அறிவித்துள்ளது. இதில் 566 கார்கள் புதிய ஸ்விப்ட் மற்றும் 713 கார்கள் புதிய டிசையர் ரகங்கள் . திரும்பப் பெற்று இருக்கும் வாகனங்கள் அனைத்தும் 7 மே 2018 முதல் 5 ஜூலை 2018 வரை உற்பத்தி செய்யப்பட்டவை. இது தொடர்பாக மாருதி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. "மாருதி கார்கள் சிலவற்றில் பாதுகாப்பு உபகரணமான காற்றுப் பையில் (air bag) கோளாறு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிற கார்களிலும் அந்தக் கோளாறு இருக்க வாய்ப்பு இருப்பதால் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் திரும்பப் பெறப்படுகிறது, மேலும் இது மாருதி டீலர்களின் மூலம் திரும்பப் பெறப்பட்டு இலவசமாக பழுது பார்த்து தரப்படும், இந்த பணி ஜூலை 25 முதல் துவங்கும்" என்று அறிவித்தார்.