இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்யும் இண்டேன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், "டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.5 உயர்த்தப்பட்டு ரூ.858.5 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும் விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வானது, இன்று (பிப்.12) முதல் நடைமுறைக்கு வருகிறது" என தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆண்டுக்கு பிறகு சிலிண்டர் விலை இவ்வளவு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்து, நாடு முழுவதும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்வார்கள். அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சென்னையில் மானியம் இல்லா சிலிண்டரின் விலை 290 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.