ADVERTISEMENT

பேருந்து ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ?

02:16 PM Jun 14, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநில நலனுக்காகவும் மக்கள் மேம்பாட்டுக்காகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு கர்நாடக மாநில அரசு பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டத்தை கடந்த 11 ஆம் தேதி பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அந்த வகையில் தங்கவயல் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபகலா சசிதர். இவர் கர்நாடக மாநில அரசுப் பேருந்தை ஒட்டி பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேருந்தை ஓட்டும் போது பேருந்தை ஓட்டத் தெரியாமல் ரிவர்ஸ் கியர் போட்டு பேருந்துக்கு பின்னால் இருந்த பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் அவர் பேருந்தை ஓட்டி திட்டத்தைத் தொடங்கி வைக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் இதுபோன்ற விபத்து ஏதும் நடந்தது போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை.

இருப்பினும் இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ரூபகலா சசிதர் கூறுகையில், "பேருந்தை ஓட்டி பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டதாகச் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக சுமார் 100 மீட்டர் தூரம் அரசு பேருந்தை ஓட்டி தொடங்கி வைத்தேன். எனக்கு வாகனம் ஓட்டத் தெரியும். ஆனால் கனரக வாகனம் ஓட்டுவதற்கு உரிய கனரக ஓட்டுநர் உரிமம் என்னிடம் கிடையாது. அதை சட்ட விதிமீறல் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பெண்களுக்காக இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் முயற்சி தான் இது" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT