ADVERTISEMENT

எம்.பி. வீட்டில் ரூ.351 கோடி பறிமுதல்; மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

01:34 PM Dec 22, 2023 | mathi23

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுவுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்து எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில், ஒடிசாவில் 6 இடங்கள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தில் சில இடங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று (21-12-23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, “ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரபலத்தின் குடும்பத்தினரால் டிஸாவில் நிர்வகிக்கப்படும் பெளத் மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிரான வருமான வரிச்சோதனையில், பெருமளவிலான வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ஏராளமான ஆவணங்கள், பண ரசீதுகளின் விவரங்கள், பணம் எங்கு மாற்றப்பட்டது என்பதற்கான குறிப்புகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில், ரூ.351 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாத ரொக்கப் பணமும், கணக்கில் வராத ரூ.2.80 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும் பகுதி பணம், ஒடிசாவின் சிறு நகரங்களில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடங்கள், மறைக்கப்பட்ட அறைகள், மறைக்கப்பட்ட இல்லங்கள், ரகசிய அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமானது, நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாத வருமானம் என்பதை அந்நிறுவனத்தின் முக்கிய ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT