மத்திய அரசின் முடிவுக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை மத்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகையை ஜம்மு காஷ்மீர் மக்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தபட்சம் 10 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த வியாழன் அன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீரில் முதலீடுகள் குவியும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும், இதன் மூலம் அதிக அளவில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று பேசியிருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது, இது முதல்முறை ஆகும்.