ஏற்கனவே குடியரசுத்தலைவர் காஷ்மீர் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாலும், நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியுள்ளதாலும் காஷ்மீர் மாநிலம், மாநில அந்தஸ்தை இழந்து, யூனியன் பிரதேசமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் சட்டம் தொடர்பான அறிவிப்பு, மத்திய அரசிதழில் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு நீடித்து வரும் நிலையில், காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து ஆலோசனை செய்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். அதன் தொடர்ச்சியாக காஷ்மீர் மாநிலம் ஷோபியனில் உள்ள பாதுகாப்பு வீரர்களை டிஜிபி தில்பாக் சிங்குடன் சென்று அஜித் தோவல் சந்தித்து பேசினார். அத்துடன் அப்பகுதி மக்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துரையாடினார். மேலும் அவர்களுடன் மதிய உணவை அருந்தினார்.
காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து அவ்வப்போது பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பி வருகிறார் அஜித் தோவல். காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இருப்பினும் மற்ற பகுதிகள் தொடர்ந்து அமைதி நிலையில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு நீடிக்கவும், ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை பள்ளி முதல் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும், அதே சமயம் ஆகஸ்ட் 8- ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை போக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையாக, இது பார்க்கப்படுகிறது.