ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ உறுதியாக இருப்பதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைத்தார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதிட்டனர். அப்போது ப.சிதம்பரமும் தனது வாதத்தை நீதிபதியிடம் முன்வைத்தார்.
அதில் எனது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் ஏற்கனவே சிபிஐயிடம் கொடுக்கப்பட்டதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.மேலும் ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். ப.சிதம்பரம் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகம் முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் (ஆகஸ்ட்- 26) நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி அனுமதி வழங்கி அதிரடி உத்தரவு.