கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா புஷ்கரன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் புஷ்கரன் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை சுமார் 4.30 மணி அளவில் இவர் பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அப்போது எர்ணாகுளம் மாவட்டம் அவுலா காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் அஜாஸ் என்பவர் தனது காரால் சௌமியாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதனால் சௌமியா நிலைதடுமாறி கீழே விழுந்ததும் காரிலிருந்து கத்தியுடன் இறங்கிய அஜாஸ் அவரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து நிலைதடுமாறி சௌமியா தப்பி ஓடிய நிலையில் மீண்டும் விரட்டிச் சென்று சௌமியாவை பலமுறை கத்தியால் குத்தினார் அஜாஸ்.
அதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அஜாஸ் காரில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து சௌமியாவின் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது பெட்ரோல் தன்மீதும் பட்டதால் அஜாஸ் மீதும் தீப்பற்றியது. ஆடையில் தீப்பற்றிய நிலையில் அங்கும் இங்கும் ஓடி இறுதியில் ஆடைகளை களைந்து உயிர் தப்பினார்.அவரை மடக்கிப்பிடித்த அக்கம்பக்கத்தினர் தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து காவலர் அஜாஸை மீட்டனர்.
அவரது உடலில் தீக்காயங்கள் காணப்பட்டதால் அவரை ஆலப்புழை மாவட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே எரிந்த நிலையில் கிடந்த பெண் காவலரின் சடலத்தை மீட்டுஉடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் எர்ணாகுளத்தில் பணியாற்றும் காவலர் அஜாஸ்க்கும் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலப்புழையில் பணியாற்றும் பெண் காவலருக்கும் எப்படி பழக்கம் உருவானது, இந்தக் கொலைக்கான பின்னணி என்ன, எதற்காக சௌமியாவை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் பொதுமக்களிடையேயும், காவல்துறையினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT