2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி, தொடர்ந்து உரையாற்றி வருகிறார். இந்தநிலையில் இன்று (03.03.2021), மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய மோடி, புதிய கல்விக்கொள்கையில் இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியது வருமாறு:
“ஒரு சுயசார்பு இந்தியாவை எழுப்புவதற்கு, இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை இருப்பது முக்கியம். இளைஞர்கள் தங்களின் கல்வி, திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளும்போது தன்னம்பிக்கை வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஆரோக்கியத்திற்குப் பிறகு கல்வி, திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையில், இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த உள்ளடக்கம், எவ்வாறு இந்திய மொழிகளில் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மொழியிலுமுள்ள நிபுணர்களின் பொறுப்பாகும்.
இந்தியா ஹைட்ரஜன் வாகனத்தை சோதனை செய்துள்ளது. இப்போது நாம் ஹைட்ரஜனை போக்குவரத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோம். பசுமை ஆற்றல், 'ஆற்றலில்' தன்னிறைவு அடைய மிகவும் முக்கியம். எனவே, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'ஹைட்ரஜன் மிஷன்' ஒரு பெரிய தீர்வாகும்.” இவ்வாறு மோடி பேசினார்.