ADVERTISEMENT

அதிகரிக்கும் சஸ்பெண்ட் நடவடிக்கை; இதுவரை இல்லாத வரலாற்றுச் சம்பவம் 

04:55 PM Dec 20, 2023 | mathi23

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, நேற்று முன்தினம் (18-12-23) நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது இரு அவைகளையும் சேர்ந்த 78 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒரே நாளில் 78 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வரலாற்றுச் சம்பவமாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று (19-12-23) நாடாளுமன்றம் கூடியபோது அமளியில் ஈடுபட்ட 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஏற்கனவே, 92 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் இதுவரை மொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (20-12-23) நாடாளுமன்றம் கூடியது. அப்போது மக்களவையில், கேரள காங்கிரஸ் (எம்) எம்.பி. தாமஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி ஏ.எம். ஆர்ஃப் ஆகிய இருவரும், பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று பதாகைகளுடன் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாகச் சென்று முழக்கமிட்டனர். அவை நடவடிக்கையை மீறி செயல்பட்டதாகக் கூறி இந்த 2 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 143 ஆகா உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது. முன்னதாக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் (22-12-23) நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT