நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிடம் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை காரியக்கமிட்டி குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 2 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை. இந்நிலையில் ராகுல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினால் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலக சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Show comments