ADVERTISEMENT

‘ராகுல் காந்தி ஒரு மாதத்திற்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும்’ - மத்திய அமைச்சகம்

08:46 AM Mar 25, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி குடியிருக்கும் அரசு பங்களாவை ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் டெல்லி எண் 12 துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் ராகுல் காந்தி வசித்து வரும் நிலையில், அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவில் குடியிருக்க முடியாது. தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT