வடக்கு கோவா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான துக்காராம் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக தனது மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் துக்காராம் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக துக்காராமின் மனைவி வீட்டில் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் துக்காராமிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மனைவிக்கு சிகிச்சையளிக்க முடியாததால், அவரை நீர்ப்பாசன கால்வாயின் அருகில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் உயிருடன் புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். புதைக்கப்பட்ட உடலை கைப்பற்றிய போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். துக்காராமையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஏழ்மை காரணமாக மனைவியை கணவனே உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.