உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கிராண்ட் ஓமாக்ஸ் எனும் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவர் ஆளும் பாஜக கட்சியில் மாநில பொறுப்பில் இருந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம், அவர் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து மரக்கன்றுகள் நடுவதற்கு முயற்சித்தார். ஆனால் அதே குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஸ்ரீகாந்த் தியாகிக்கும் அந்த பெண்ணுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அந்த பெண் மீது ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் தியாகி, ஒரு பெண் என்று கூட பாராமல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். மேலும், அந்த பெண் மீது ஸ்ரீகாந்தும் அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள், அந்த பெண்ணை தடுத்து அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகளை கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரது செல்போனில் ரெக்கார்ட் செய்து சோசியல் மீடியாவில் லீக் செய்தார். இணையத்தில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பாஜக நிர்வாகியின் செயலுக்கு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், ஸ்ரீகாந்த் தியாகிக்கு இது ஒன்றும் புதிதல்ல. சர்ச்சையான செயல்களை செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள ஸ்ரீகாந்த் தியாகி, கடந்த 2019 ஆம் ஆண்டில் குடியிருப்பு வளாகத்தில் சட்டவிரோதமாக கட்டிடத்தை கட்டியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தியாகிக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, தியாகியின் பாதுகாப்புப் பணியாளர் குடியிருப்பாளர்களை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். இது பற்றிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்நிலையில், தலைமறைவான ஸ்ரீகாந்த் தியாகி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒரு வாரம் கழித்து டேராடூன் ஹைவே ரூட்டில் ஸ்ரீகாந்த் உள்பட 4 பேரை நொய்டா காவல்துறை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பியது. இதனையடுத்து, அவர் பாஜக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
ஜாமீனுக்காக போராடிய தியாகி, 3 மாத சிறைத் தண்டனைக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதனை அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்டமாய் கொண்டாடி வருகின்றனர். இளம்பெண்ணை தகாத வார்த்தையால் பேசி சிறைக்கு சென்று வந்த ஸ்ரீகாந்த் தியாகியை ஏதோ நாட்டு மக்களுக்காக போராடி சிறைக்குச் சென்றது போல் கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.