மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 30 வயதான அஜித் ஜாதவ் என்ற விவசாயி, தனது கனரகப் பம்புகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டி மாவட்ட கலெக்டரின் காலில் விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் பரவிவருவதோடு, பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. தனது விவசாய நிலத்தில் உள்ள சிறிய மின் மோட்டாரை இயக்க மின்மாற்றி அமைக்க வேண்டி ரூ.40,000 பணம் செலுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவு செய்துள்ளார். மின்சாரம் பெற தேவையான அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து நடைமுறைகளை முடித்த பின்பும் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அந்த விவசாயி தனது மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவரது கால்களில் விழுந்து மின்சார வசதி செய்துதருமாறு கோரியுள்ளார். அவர் ஆட்சியரின் கால்களில் விழுந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்கு மின்சார வசதிகள் செய்து தரப்பட்டதாக ஆட்சியர் அனுராக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.