இது தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 11 ஆம் தேதி (11.03.2024) நடைபெற்ற விசாரணையில், மார்ச் 12 ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வெளியிடவும், அதனை மார்ச் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) வழங்கியது. மேலும் தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தேர்தல் பத்திரங்களை நிறுவனங்கள், தனி நபர்கள் வாங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம்பெற்றிருந்தன. அதாவது 337 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களும் அடங்கி இருந்தன.
அதே சமயம் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த 15ஆம் தேதி (15.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (21.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தேர்தல் பத்திர எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி வழங்கி உள்ளது. அதாவது தேர்தல் பத்திர சீரியல் எண்களுடன், தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய முழு தகவல்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி சமர்ப்பித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் விரைவில் இணையதளத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.