புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு பின்புறம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் வசித்து வந்தனர். ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் குடியிருந்ததால், கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தையும் ரயில்வே துறையினர் இடித்து அகற்றினர். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் உப்பளம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தொடர் சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு ரெட்டியார்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன.
இந்நிலையில் வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணையை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உப்பளம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி வழங்கினார். ஆணையை பெற்றுகொண்ட பயனாளிகள் அனைவரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் உப்பளம் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், தி.மு.க மாநில இளைஞரணி ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் நோயல், அஷ்ரப், செல்வம், ரவிக்குமார், காலப்பன், சரஸ்வதி, அறிவழகன், மோரிஸ், ரகுமான் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.