ADVERTISEMENT

"சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை" - எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு ராகுல் காந்தி பேட்டி!

11:49 AM Jul 28, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.

இந்தசூழலில், நேற்று (27.07.2021) எதிர்க்கட்சி எம்.பிக்களின் கூட்டம், நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே உள்ளிட்டவர்களும், பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டுக் கட்சி, கேரள காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், பெகாசஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சூலே ஆகியோர் உட்பட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "குடிமக்கள், விவசாயிகள், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை நாம் எழுப்புகையில், ‘நாம் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவில்லை’ எனக் கூறி மத்திய அரசு எதிர்க்கட்சிகளை அவதூறு செய்கிறது" என கூறியுள்ளார். இந்தக் கருத்தினை எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆதரித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ராகுல் காந்தி, "பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. நாங்கள் சபையில் விவாதம் நடைபெறுவதை விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT