ADVERTISEMENT

மக்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு!

11:55 AM Feb 10, 2024 | prabukumar@nak…

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதே சமயம் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைய உள்ளது. வழக்கமாக சனிக்கிழமைகளில் நாடாளுமன்ற அலுவல்கள் நடக்காத நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடியுள்ளதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையில் நாடாளுமன்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர தலைமை கொறடா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் ‘நாடாளுமன்றத்தில் முக்கிய அலுவல் இருப்பதால் கட்டாயம் அவைக்கு வர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் மக்களவையில், தமிழக மீனவர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டியதுடன், தமிழக மீனவர்கள் கைது சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என தி.மு.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. இது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக கடந்த 28 நாட்களில் மட்டும் 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 12 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தமிழக மழை வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும், தமிழகத்திற்கு புயல் மற்றும் வெள்ள நிவாரணம் வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும், வெள்ள பாதிப்பு நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT