ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் ஒன்றிய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ''ஜூன் 2023ல் சோகமான பாலசோர் ரயில் விபத்து நடந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் ரயில் மோதிய விபத்து ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும் 'கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மத்திய அரசும், ரயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்' எனவும் வலியுறுத்தியுள்ளார்.