கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டத்தின் போது, ஒரு அரசு கல்லூரியில் தேசிய கோடி ஏற்றப்பட்ட இடத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தநிலையில், அம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, காவிக்கொடி ஒருநாள் தேசியக் கொடியாக மாறலாம் எனத் தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நேற்று கர்நாடக மாநில காங்கிரஸார் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, அம்மாநில சட்டமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். மேலும் தேசியக் கொடியை ஏந்தி ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ”செங்கோட்டையில் காவிக்கொடி உடனே ஏற்றப்படும் என அவர் கூறவில்லை. இன்னும் 300 அல்லது 500 வருடங்களில் அது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் என்றுதான் அவர் தெரிவித்தார். நாங்கள் தேசிய கோடியை ஏற்றுக்கொண்டோம் எனவும், அதை யாரும் அவமதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.காங்கிரஸார் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். சட்டப்படி ஈஸ்வரப்பா எந்த தவறும் செய்யவில்லை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும், கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.