Skip to main content

கர்நாடக சபாநயகர் அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போன பாஜக!

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை  கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

karnataka



இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த  ரானெ பென்னூர் தொகுதி எம்எல்ஏ சங்கர், கோகக் மற்றும் அதானி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் மகேஷ் குமுதஹாலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 15-வது சட்டசபை கர்நாடகத்தில் கலைக்கப்படும் வரை, அவர்கள் மூவரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் குறிப்பிட்டார்.


கர்நாடகவில் ஆட்சி அமைக்க  சட்டசபையில் 112 உறுப்பினர்களின் எண்ணிக்கை வேண்டும் என்ற நிலையில், பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக ஆட்சி அமைத்தாலும் நீடிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறுகின்றனர். அதே போல் கர்நாடக சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கைகளை பாஜக தலைமை உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.