ADVERTISEMENT

திகார் சிறையில் அமைச்சருக்கு சொகுசு வசதி; வெளியான சிசிடிவியால் பரபரப்பு

11:22 AM Nov 19, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் அமைச்சராக இருந்த கடந்த 2015 - 2016 காலகட்டங்களில், சத்யேந்திர ஜெயின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, போலி நிறுவனங்கள் மூலம் சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு சி.பி.ஐ., ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக வைத்து சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கையும் பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மே மாதம் அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்தது. இவருடன் சேர்த்து வைபவ் ஜெயின், அங்குஷ் ஜெயின் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தரப்பிலிருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், விசாரணையின் போது அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திகார் சிறை விதிமுறைகளை மீறி சொகுசாக இருந்து வருவதாக அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், திகார் சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிலர் கை, கால் அமுக்கி மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் செய்து சிறையில் இருக்கும் ஒருவருக்கு சகல வசதியும் செய்து கொடுத்து அவர் சொகுசாக வாழ்வதற்கு பெயர் தண்டனையா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT