ADVERTISEMENT

அதானியை சுற்றும் ஹிண்டன்பெர்க் சூறாவளி; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு

05:27 PM Feb 04, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் எஃப்.பி.ஓ பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும், முதலீட்டாளர்களுக்கு விற்பனைத் தொகையைத் திரும்ப செலுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி நிறுவனத்தின் மீது ஹிண்டன்பெர்க் நிறுவனம் வைத்துள்ள குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அத்தோடு அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரத்தை வழங்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அதானி நிறுவனத்தின் மீதான மோசடி புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த அதானி ஹிண்டன்பெர்க் அறிக்கையால், தற்போது 57 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் மற்றொரு பணக்காரரான முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் 12 ஆம் இடம் பிடித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT