ADVERTISEMENT

பற்றியெரியும் நகரம்; தொடரும் உயிரிழப்புகள்; விரைந்த அமித்ஷா!

01:32 PM May 31, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 80 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதனிடையே இரு சமூகத்தினருக்கும் ஏற்பட்ட கலவரத்தின் போது பிரபல குத்துச்சண்டை வீரர் மேரிகோம் எங்கள் மணிப்பூர் மாநிலம் பற்றி எறிகிறது. தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த சமயத்தில் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் பணிகள் நடந்து வந்ததால் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட முக்கிய அமைச்சர்கள் பலரும் பெங்களூருவில் முகாமிட்டிருந்தனர். மணிப்பூரில் பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட பின்பு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்தபடி மணிப்பூர் மாநில முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார்.

அம்மாநில ஆளுநர் மூலம், கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக சில நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மணிப்பூர் மாநிலத்திற்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், சாலை போக்குவரத்தும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரம் நடைபெற்ற இடத்தில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அவ்வப்போது கலவரங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த உள் மாநில கலவரத்திற்குப் பிறகு மணிப்பூரில் அடிப்படை பொருட்களின் விலை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகளவில் உயர்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்தக் கலவரங்களின் ஒரு பகுதியாக இரண்டு நாட்களுக்கு முன்பு, கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தத் தாக்குதலில் 30 கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை மணிப்பூர் சென்றுள்ளார். அங்கு இம்பாலில் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்குடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் நிவாரண உதவிகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று தலைநகர் இம்பாலில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இரு சமூக பிரதிநிதிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மாநிலக் காவல்துறை, மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அவர், “மணிப்பூரில் அமைதி மற்றும் வளத்தை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாகும். அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT