நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் சிலை அரசியல் இன்னமும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. அதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடர்ச்சியாக அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள புடவுன் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
இந்த சிலை முழுமையாக சீரமைக்கப்பட்டு, இன்று காலை திறக்கப்பட்டது. ஆனால், இந்த சிலை அம்பேத்கர் எப்போதும் காட்சியளிக்கும் நீல நிறத்தில் இல்லாமல், காவி நிறத்தில் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல், நிற அரசியலில் பாஜக ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஹிமேந்திர கவுதம் காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு, நீல நிறம் பூசினார்.
இதற்கு முன்னதாக பாஜக பிரமுகர் ஹிமேந்திர கவுதம், ‘அம்பேத்கர் சிலை காவி நிறத்தில் இருப்பதற்கு, பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கவுதம புத்தரே காவி உடையைத் தான் போர்த்தியிருந்தார்’ என பேசியது குறிப்பிடத்தக்கது.