நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தூய்மை இந்தியா என்ற மத்திய அரசின் திட்டம் கொண்டுவரப்பட்டும், சுகாதாரத்தை பரவலாக்க முடியவில்லை. பல இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் பலர் மோசடியை நடத்துவதாக தகவல்கள் வருகின்றனர்.
திறந்தவெளிக் கழிப்பிடங்கள் சுகாதாரத்தை மட்டுமின்றி, பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன. இந்நிலையில், வீட்டில் கழிவறை இருக்கவேண்டிய கட்டாயத்தை உணர்ந்த 15 வயது சிறுமி கழிவறை கட்டித்தருமாறு தன் வீட்டினரையும், உள்ளாட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரைச் சேர்ந்த நிஷாராணி எனும் 10ஆம் வகுப்பு மாணவி, ‘எங்கள் பள்ளியில் கழிவறையின் தேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போதுதான் எனக்கு சுகாதாரத்தின் அவசியமே புரிந்தது. அன்றைய தினமே நான் வீட்டிற்கு வந்து கழிவறை கட்டித்தரவில்லை என்றால், உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறினேன். அதையே செய்தேன்’ என தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ளாட்சி நிர்வாகம் அவரது வீட்டில் சொந்தமாக கழிவறை ஒன்றைக் கட்டித் தந்துள்ளது.