ADVERTISEMENT

தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் ரத்து; வெளியான முக்கிய அறிவிப்பு

07:59 AM Dec 18, 2023 | mathi23

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதோடு திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சூழலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதே போல், விருதுநகர், திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், மற்றும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் இன்று (18-12-23) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தாம்பரம் பகுதியில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் விரைவு ரயில் விருதுநகர், ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், நெல்லை, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று (18-12-23) ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT