ஆதார் அட்டை தொடர்பான நிறைய சந்தேகங்கள் இன்றும் மக்கள் மத்தியில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் முக்கியமானது ஆதார் நம்பகத்தன்மையானதா என்பது. தற்போது இந்த சந்தேகங்கள் அனைத்தும் இன்னும் கூடுதலாகி உள்ளது. நேற்று மர்மநபர் ஒருவர் உங்கள் 13 அடி பாதுகாப்பு அமைப்பு சுவற்றின் மீது உங்களுக்கு மிக அதிக அளவில் நம்பிக்கை இருந்தால் உங்களின் ஆதார் எண்ணை வெளியிடுங்கள் என சவால் விட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த சர்மா, தனது ஆதார் எண்ணையும் சேர்த்து பதிவிட்டார். மேலும் அவர், “நான் இப்போது உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முடிந்தால் என் ஆதார் எண்ணை வைத்து எனக்கு ஏதாவது தீங்கு விளைவிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் காட்டுங்கள் பார்ப்போம்” என பதில் கூறினார்.
ஆதார் எண் வெளியான சில மணி நேரத்திலேயே எலியட் ஆண்டர்சன் என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த மர்ம நபர், ஆர்.எஸ்.சர்மாவின் முகவரி, தொலைபேசி எண், பான் எண், பிறந்தநாள், மற்றும் அவருடைய வாட்ஸ் அப் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்களையும் வரிசையாக பதிவிட்டார். அத்துடன் உங்கள் ஆதார் எண் எந்த வங்கிக் கணக்குடனும் லிங் செய்யப்படவில்லை என்றும் ட்வீட் போட்டுள்ளார். இதற்கு அந்த தொலைபேசி எண் என்னுடையதல்ல என டிராய் தலைவர் மறுத்துகூற, அது உங்களுடைய உதவியாளருடையது என அந்த மர்மநபரிடமிருந்து பதில் ட்வீட் வந்தது.
மேலும் அவர் “நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். பொதுவாக சமூக வலைத்தளங்களில் ஆதார் எண்ணை பதிவிடுவது நல்ல முறை அல்ல என்பதை நீங்கள் உணர்வீர்கள் என நான் நம்புகிறேன், உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுங்கள்” எனவும் கூறியுள்ளார். இது குறித்து டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா இன்னும் பதிலளிக்கவில்லை.
மேலும் அவர், பிரதமர் நரேந்திர மோடி உங்கள் ஆதார் எண்ணை பதிவிடமுடியுமா? (உங்களிடம் இருந்தால்) எனக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் உங்கள் சுயவிவரங்கள் இருந்தால் உங்களுக்கு தனியுரிமை (privacy) என்ற ஒன்றே கிடையாது. இந்தக் கதையை இத்துடன் முடித்துக்கொள்வோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், “நான் ஆதாருக்கு எதிரானவன் கிடையாது. ஆதாரை யாரும் எதுவும் செய்யமுடியாது, அது மிகமிக பாதுகாப்பானது என்று கூறுபவர்களுக்குதான் நான் எதிரானவன்.” எனவும் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் பாப்டிசைட் என்பவர்தான் எலியட் ஆண்டர்சன் என்ற பெயரில் ட்விட்டரில் இந்தத் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது இந்த ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.