Skip to main content

3 மணிநேரத்தில் 20ஆயிரம் ஆதார் விவரங்கள் திருட்டு! - மறுக்கும் ஆதார் ஆணையம்

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

வெறும் மூன்று மணிநேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் விவரங்களைக் கைப்பற்ற முடிந்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பாப்டிஸ்ட் ராபர்ட், தொடர்ந்து இந்திய இணையதளங்களில் எளிதில் திருடப்படும் நிலையில் இருக்கும் ஆதார் விவரங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறார். இவர் எல்லியர் ஆல்டர்சன் என்ற பெயரில் இயங்கும் தனது ட்விட்டர் பக்கத்தின் வழியாக இந்தத் தகவல்களை வெளியிடுகிறார். இந்நிலையில், வெறும் மூன்று மணிநேரத்தில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் விவரங்களை கைப்பற்ற முடிந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது எனவும் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

இதுகுறித்து இந்திய தனிமனித அடையாளத்திற்கான ஆணையம், ‘ஆதார் விவரங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றன. கடந்த 8 ஆண்டுகளில் ஒரு தகவல்கூட இப்படி களவுபோனதில்லை. ஆதார் விவரங்களைக் கைப்பற்றிவிட்டதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. ஆதார் மிகவும் நம்பத்தகுந்த அடையாள அட்டை’ என பதிலளித்துள்ளது.

 

 

 

 

இதற்கு முன்னர் பாப்டிஸ்ட் ராபர்ட் தெலுங்கானா அரசு இணையதளம், பி.எஸ்.என்.எல். இணையதளம் உள்ளிட்ட பல அரசு கட்டுப்பாட்டில் உள்ள இணையதளங்களில் இருந்து ஆதார் விவரங்களைக் கைப்பற்றி ஆதாரத்தோடு பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

 

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு இணைப்புடன் (லிங்) குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறியுள்ளார்.


மேலும் அவர், ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே அவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகார் மிகத் தீவிரமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

Next Story

நாசாவையும் விட்டு வைக்காத தகவல் திருட்டு...

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

 

sad

 

இன்றைய இன்டர்நெட் உலகில் தகவல் திருட்டு என்பது அடிக்கடி நடந்து வரும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களின் தகவல்கள் கூட சமீப காலங்களில் திருடப்பட்டன. ஆனால் இவையனைத்தும் தனியார் வசம் இருக்கும் சாதாரண சமூகவலைதள பக்ககங்களே. ஆனால் தற்பொழுது அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் இருக்கும் நாஸாவிலும் இந்த தகவல் திருட்டு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அமைப்பு என கூறப்படும் நாசாவிலேயே இப்படி நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2018 வரை அங்கு வேலை செய்த பணியாளர்கள் குறித்த விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் திருட்டு கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்றதாக நாசா தெரிவித்துள்ளது. இதனை செய்தவர்கள் யார் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாக நாசா தெரிவித்துள்ளது.