கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆடு மற்றும் நாயுடன் திரண்டனர். தாலி கட்டப்பட்டும், நெற்றியில் குங்கும பொட்டும் வைத்திருந்த அலமேலு என்ற ஆடு மற்றும் அஞ்சலி என்ற நாய்க்கு, இந்து அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், இந்த இரண்டு விலங்குகளுக்கும் விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர். ஒருவனுக்கு ஒருத்தி என தாலி கட்டியவுடன் வாழ்வதுதான் கலாச்சாரம் எனக்கூறும் இந்து அமைப்பினர், தாலி கட்டி திருமணம் செய்துவைத்த ஆட்டையும், நாயையும் நடுத்தெருவில் விட்டுச் சென்றதாகவும் த.பெ.தி.க. அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம்சாட்டினார்.
மேலும், இவற்றை கணவனுடன் சேர்த்துவைக்கக் கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் கூறிய அவர், தங்களது அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விவகாரத்து மனுத்தாக்கல் செய்வார்கள் என தெரிவித்தார். இந்த நூதன போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.