இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, நீதிபதி லோயா மரணம் தொடர்பான தீர்ப்பை வழங்கியது. இந்த சமயத்தில் உச்சநீதிமன்ற இணையதளப் பக்கம் முடங்கியது. பெரும்பாலானோர் லோயா வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற பக்கத்திற்கு சென்றதால், நெருக்கடி காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால், உச்சநீதிமன்ற இணையதளப் பக்கத்தில் கன்னபிஸ் செடியின் இலைபோன்ற வடிவத்திலான எழுத்துகளுக்கு மேல் ‘te amo linda pequena... melhor amiga que ja tive’ என பிரேசிலிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதனை மொழியாக்கம் செய்தபோது ‘எனது நெருங்கிய நண்பன் ஏற்கெனவே வைத்திருந்த அந்த அழகிய சிறிய ஒன்றை, ரொம்பப் பிடிக்கும்’ என அர்த்தம் கிடைக்கிறது. இதன்மூலம் ஹேக்கர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், அதற்கு மேல், hackeado por HighTech Brazil HacTeam என குறிப்பிட்டிருப்பதால், இந்த விவகாரத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்களுக்குத் தொடர்பிருக்கலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளப் பக்கங்கள் அடுத்தடுத்து ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது உச்சநீதிமன்ற இணையதளப் பக்கத்தை மீட்டுக்கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.