ADVERTISEMENT

"மோடி விமானத்தில் பண மூட்டை" - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு...

11:48 AM Apr 03, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், நாளை (04.04.2021) மாலையோடு பிரச்சாரங்கள் முடிவடைய இருக்கின்றன. நாளை மாலை ஏழு மணியோடு பிரச்சாரங்கள் முடிவடையும் சூழலில், வரும் ஆறாம் தேதி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வடலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா ஆகியோர் மாறி மாறி இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

இன்றைக்கு காலையில் ஒரு செய்தியைப் பார்த்து இருப்பீர்கள். என்னுடைய மகள் வீட்டில் இன்றைக்கு சோதனை நடத்தினார்கள். நாளைக்கு என் வீட்டில் நடக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள். அப்போதுதான் தி.மு.க. இன்னும் வலுப்பெறும். தி.மு.க. இன்னும் உணர்ச்சி பெறும். நாங்கள் என்ன அ.தி.மு.க.வா உங்கள் சோதனையைப் பார்த்துப் பயந்து மூலையில் உட்கார்ந்து கொள்வதற்கு? நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி விட மாட்டோம்.

வருமான வரித்துறை சோதனை என்றால் என்ன தெரியுமா? வருமானத்துக்கு மீறி சொத்துச் சேர்த்திருந்தால், அதைக் கணக்கில் காட்டாமல் இருந்தால் சோதனை செய்ய வேண்டும்.

ஆனால் அவர்கள், தேர்தலுக்காக ஏதோ பணம் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது. அதனால் வந்தோம் என்று இறுதியாக சொல்லப் போகிறார்கள். இதுவரைக்கும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத் தேடுங்கள். அதைத்தான் செய்தியாகச் சொல்லப் போகிறார்கள்.

இப்போது எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. என்ன செய்தி என்றால், மோடி வருகின்ற விமானத்தில் பண மூட்டையுடன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாராபுரத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரைக்கு வந்திருக்கிறார். இரவோடு இரவாக வந்திருக்கிறார். அதனால் பண மூட்டையுடன் வந்திருக்கிறார். நாளைய தினம் அமித்ஷா வரப்போகிறார். அவரும் பண மூட்டையுடன் வரப்போகிறார் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

வருமான வரித்துறையினருக்கு, நேரடியாக அவர்கள் வரும் விமானத்திற்குச் சென்று சோதனை செய்வதற்கு தைரியம் இருக்கிறதா?

பிரதமருக்கு ஒரு சட்டம். ஸ்டாலினுக்கு ஒரு சட்டமா? என்று நான் கேட்கிறேன். அவர் இந்த நாட்டின் பிரதிநிதிதான், நானும் இந்த நாட்டின் பிரதிநிதிதான்.

தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் கருத்துக் கணிப்புகள் எல்லாம், தி.மு.க. தான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதைத் தாங்க முடியவில்லை. அவர்களுக்கு எரிச்சல் வந்து விட்டது. ஆத்திரம் வந்துவிட்டது. பொறாமை வந்து விட்டது. எப்படியாவது ஐந்தாறு சீட்டாவது வென்று விடலாம் என்று பா.ஜ.க. நினைத்துக் கொண்டிருக்கிறது. நான் சொல்கிறேன், நீங்கள் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது தமிழ்நாடு. தந்தை பெரியார் பிறந்த மண் – பேரறிஞர் அண்ணா பிறந்த மண் - தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இது திராவிட மண். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மோடி அவர்களே… அமித் ஷா அவர்களே… உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

வருமான வரித்துறைச் சோதனை என்றால் கணக்கு வழக்கு தவறாக வைத்திருந்தால், ஒரு மாதத்திற்கு முன்பு சோதனை செய்திருக்க வேண்டும். இல்லை என்றால், தேர்தல் முடிந்த பிறகு செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அது எங்கள் கடமை. வருமான வரித்துறையை ஏமாற்றினால் அதற்குரிய தண்டனை இருக்கிறது. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நான்கு நாட்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய தோழர்களை, அவர்கள் வேலையை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களை முடக்கி வைக்க வேண்டும், அவர்களை பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் செய்தீர்கள் என்றால், அதற்கெல்லாம் அஞ்சி, நடுங்கி, மூலையில் முடங்குகின்ற கட்சி தி.மு.க. அல்ல. அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி இது. தலைவர் கலைஞரிடத்தில் பயிற்சி பெற்றவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

மோடி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுச் சென்றிருக்கிறார். ஏற்கனவே தாராபுரத்தில் வந்து பேசி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரையில் இன்றைக்குப். பேசிவிட்டு சென்றிருக்கிறார். நான் தாராபுரத்தில் பேசிவிட்டுச் சென்றபோது ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன்.

2015-ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தீர்கள். அதற்குப் பிறகு நான்கு வருடம் கழித்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினீர்கள். ஒரு செங்கல் வைத்துவிட்டுச் சென்று விட்டீர்கள். இன்றைக்கு அந்தச் செங்கல்லையும் எடுத்துக்கொண்டு உதயநிதி ஊர் ஊராகச் சென்று காட்டிக் கொண்டிருக்கிறார்.

அவர் இன்றைக்கு என்ன பேசுகிறார் தெரியுமா? எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வருவது மட்டுமல்ல, சிறப்பாக இருக்கும் என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

15 மாநிலங்களில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்ற எல்லா மாநிலங்களிலும் வேலையைத் தொடங்கி விட்டீர்கள். அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி விட்டீர்கள். ஆனால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஆனால் சிறப்பாகச் செய்வோம் என்று சொல்கிறீர்களே எப்படி? ஒரு சினிமாவில் வடிவேலு சொல்வார், ‘வரும் ஆனா வராது’ என்று, அதுபோலத்தான் இருக்கிறது.

அது மட்டும் சொல்லவில்லை. தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார். அது என்ன எண்ணற்ற திட்டம். எய்ம்ஸ் திட்டமே சிரிப்பாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு யோக்கியதை இல்லை" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT