இத்தகைய சூழலில் செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று கடிதம் அனுப்பி இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செந்தில்பாலாஜி எழுதியிருந்த கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தங்களது தலைமையின் கீழ் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீதிக்காகப் போராட தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. தான் நிரபராதி, உண்மையைக் வெளிக் கொண்டு வர சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (12.02.2024) தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என். ரவி அங்கீகரித்து செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக செந்தில்பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.