ADVERTISEMENT

சுரங்க விபத்து;‘தொழிலாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்’ - உத்தரகாண்ட் முதல்வர்

10:20 AM Nov 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

மீட்புப் பணிகளில் 17வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தைத் துளையிடும் பணியின்போது ஆகர் இயந்திரத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் துளையிடும் பகுதியில் இரும்புக் கம்பி இருப்பதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

மேலும் மீட்புக் குழுவினர் ஆகர் இயந்திரத்தைக் கொண்டு துளையிடும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், மாற்று வழியில் தொழிலாளர்களை மீட்பது குறித்து மீட்புக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் பிளான் ‘ஏ’ படி நேற்று மாலை கிடைமட்டமாக அமைக்கப்பட்ட குழாய் மூலம் மனிதர்கள் சென்று கைகளால் பள்ளம் தோண்டி இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கிய நிலையில் தற்போது சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க கிடைமட்டமாக குழாய்களை அனுப்பும் பணி மும்முரம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்,“பொறியாளர்கள், மீட்புக்குழு நிபுணர்கள் மற்றும் வல்லுநர் குழுவினர் என பலரும் தங்கள் முழு பலத்துடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கிடைமட்ட குழாய் 52 மீட்டர் வரை சென்றுள்ளது. நடந்து வரும் மீட்பு பணிகளில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். கிடைமட்ட குழாய் தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவுடன் அதன் வழியாக தொழிலாளர்களை வெளியே கொண்டு வரும் பணி தொடங்கும். தொழிலாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT