Skip to main content

சுரங்கப்பாதை விபத்து; மீட்புக் குழுவினர் ஒத்திகை

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Tunnel incident; Rescue crews rehearse 

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

 

மீட்புப் பணிகளில் 13வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் நேற்று பிற்பகலுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தைத் துளையிடும் பணியின்போது ஆகர் இயந்திரத்தைத் தாங்கிக் கொண்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. இதனால் துளையிடும் பகுதியில் இரும்புக் கம்பி இருப்பதால் துளையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதே சமயம் இரண்டாவது திட்டமான மலையில் செங்குத்தாகத் துளையிட மீட்புக் குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் துளையிடும் பணி தொடங்க உள்ளது.

 

Tunnel incident; Rescue crews rehearse 

 

இந்நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக ராட்சத குழாய் வழியாகச் சக்கர ஸ்ட்ரெச்சர்களின் இயக்கத்தின் மூலம் மீட்பதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிய தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க இன்னும் 14 மீட்டர் துளையிட வேண்டி உள்ளது. அடுத்த 5 மீட்டர் தூரத்திற்கு எந்த உலோக அடைப்புகளும் இல்லாததால் எளிதாகத் துளையிட முடியும். இன்று இரவுக்குள் மீட்புப் பணிகள் நிறைவு பெறும் என்று மீட்புப் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்