ADVERTISEMENT

தீர்ப்பு வர காலதாமதம்: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற முடிவு? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!

08:39 AM Jun 16, 2018 | Anonymous (not verified)


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் மீதான தீர்ப்பு வர காலதாமதம் ஆவதால், இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாங்கள் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார். அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில், மற்ற 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அன்று பிற்பகல் 1 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.. அதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தெரிவித்தார்.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும். தகுதிநீக்க வழக்கின் முடிவு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களும் விரைவில் நீதிமன்றத்தை நாடி, தாங்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் தங்களின் வழக்குகளை வாபஸ் பெற்று அடுத்தகட்டமாக காலியாக உள்ள 18 தொகுதிகளிலும் விரைவில் தேர்தலை நடத்தவும் நீதிமன்றத்தில் மனு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறும்போது, 18 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை வாபஸ் பெறுகிறேன். நீதிமன்றத்தை நம்ப தயாராக இல்லை. எனவே, என்னுடைய தொகுதிக்கு எல்.எல்.ஏ வேண்டும் என அறிவித்து விட்டு இடைத்தேர்தல் என்னுடைய தொகுதியில் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். இது என்னுடைய நிலைப்பாடு மட்டுமே. மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது என்றார்.

டிடிவி ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வனை போல் மற்ற எம்.எல்.ஏ.க்களும் கூடிய விரைவில் தகுதி நீக்க வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அடுத்தகட்ட தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT