ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட சென்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறியபோது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.