Skip to main content

அரை நிர்வாணமான வில்லங்க வீடியோவில் மந்திரி! - வேலை தருவதாக பாலியல் மோசடி!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

ddd

 

அரை நிர்வாணமான ஆண்! ஓர் இளம் பெண்ணுடன் விடுதிப் படுக்கையில் இணைந்து திறந்த மேனியைக் காட்டும் 'சம்பவ' வீடியோ’சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கவலைகள் அனைத்தும் தற்காலிகமாக மறக்கடிக்கப்பட்டன. சம்பவத்துக்கு உரிமையாளரான ரமேஷ் ஜார்கிஹோளி. வயது அதிகமில்லை. ஜஸ்ட் அறுபதுதான். இவர் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்பது கூடுதல் சிறப்பு.

 

காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலும் எம்.எல்.ஏ.வாகவும் வலம்வந்தவர். காங்கிரஸில்  அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக பா.ஜ.க.வில் இணைந்த தேசபக்தர். ‘‘காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி’’ ஆட்சியைக் கவிழ்த்ததில் மிக முக்கியப் பங்காற்றிய புண்ணியவான். அதற்குப் பரிசாக இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கோகாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா இவருக்கு மிகவும் பொறுப்புமிக்க நீர்ப்பாசனத்துறையை வழங்கினார்.

 

இந்த மாமனிதனின் பொறுப்பில் உள்ள நீர்ப்பாசனத்துறையின் கீழ்தான் கர்நாடகத்தில் உள்ள அணைக்கட்டுகள் அனைத்தும் சேரும். தமிழகத்துக்கு காவிரிநீர் திறப்பு, ஆந்திர - கர்நாடக நதி எல்லைகள் மேற்பார்வை, குண்டாறு - காவிரி இணைப்பு போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகள் நிறைந்த துறை.

 

அணைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படம் எடுப்பதற்காக உதவி கேட்டு வடகர்நாடக பகுதியைச் சேர்ந்த இளம்பெண் இவரிடம் வர, அணைகள் பற்றிய ஆராய்ச்சிக்கு வந்த பெண்ணை அரசு வேலை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அரவணைத்து, கலவியியல் ஆராய்ச்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார். ஆனால் வாக்குறுதி கொடுத்தபடி அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

 

'ஆராய்ச்சி'ப் பணிகள் மட்டும் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தபோதுதான், அந்தப் பெண்ணிடம் தானும் அவளும் சம்பந்தப்பட்ட செக்ஸ் வீடியோ இருப்பதை தெரிந்துகொண்ட ஜார்கிஹோளி, அந்த வீடியோவைத் தரும்படியும் இல்லையேல் கொலைசெய்து அணைக்கட்டுகளில் உள்ள மீன்களுக்கு இரையாகப் போட்டுவிடுவதாகவும் மிரட்டியதுடன் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கும் தன் தம்பி பாலச்சந்திர ஜார்கிஹோளி மூலம் கொலைமிரட்டல் விடுக்க, பயந்துபோன அந்தப் பெண் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உதவிநாடி, தினேஷ் கல்லஹள்ளி என்ற சமூக ஆர்வலர் மூலம் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்திடம் உள்ளது உள்ளபடி அனைத்து ஆடியோ, வீடியோ, வாட்ஸ் ஆப் ஆதாரங்களுடன் புகார் அளித்துவிட்டார்.

 

மிகமிக நெருக்கமாக இருக்கும் வீடியோவில் அமைச்சரின் முகம் மிகத் தெளிவாகவே தெரிகிறது. அரைகுறை உடையுடன் படுக்கையில் உருண்டு புரள்வது போன்ற காட்சிகள். படுக்கையில் இருந்த வேளையில் அந்தப் பெண்ணிடம், முதல்வர் எடியூரப்பா பெரும் ஊழல்வாதி என்றும் அடுத்த கர்நாடக முதல் மந்திரியாக பிரகலாத் ஜோஷிதான் நியமிக்கப்படுவார் என்றும் ரமேஷ் ஜார்கி ஹோளி கூறியுள்ளார். தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா நல்ல தலைவர் என்றும் அந்தப் பெண்ணிடம் உரையாடிக்கொண்டே உறவாடியுள்ளார். இந்நிலையில், புகாரை ஏற்ற நகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

 

ஆபாச வீடியோ கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பா.ஜ.க.அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரசார் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்.

 

மாநில பா.ஜ.க. தலைவர் நளின்குமார் கட்டில், முதல்மந்திரி எடியூரப்பா ஆகியோருடன் ஆலோசித்த பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங், அமைச்சரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். கட்சியை விட்டும் தூக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் ராஜினாமா செய்தார் ரமேஷ் ஜார்கிஹோளி. தான் ராஜினாமா செய்வதற்கு முன்பு முதலமைச்சர் எடியூரப்பாவிடம், தனது துறையை அவரே வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அடுத்தமுறை மந்திரிசபை விரிவாக்கம் செய்யும்போது தம்பி பாலச்சந்திர ஜார்கிஹோளிக்கு மந்திரி பதவி வழங்கி நீர்ப்பாசனத் துறையை தம்பிக்கே ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டிக்கேட்டுக்கொண்டதுதான் இதில் ஹைலைட்.

 

- சுந்தர் சிவலிங்கம்