'உறவுகள்' அமைப்பின் மூலம் யாரும் இல்லாத சாலையோர வாசிகளின் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் அமைப்பைக் கடந்த சில ஆண்டுகளாக, காலித் அகமத் என்பர் நடத்தி வருகிறார். அவரிடம் எதற்காக இதைச் செய்கிறீர்கள். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அனைவரிடமும் கிடைக்கிறதா என்று பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
![h](http://image.nakkheeran.in/cdn/farfuture/75lOWxeqFcpfNAXsHbhFXJc1J8-GbrSEZvvkfHpC25s/1587196162/sites/default/files/inline-images/kl%3B.jpg)
'உறவுகள்' அமைப்பின் மூலம் சாலையில் வசிப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறீர்கள், உறவுகள் இல்லாதவர்களை அடக்கம் செய்ய உதவி செய்கிறீர்கள், இந்த உறவுகள் அமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது, என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது?
உறவுகள் அமைப்பு கடந்த 2017-ம் ஆண்டும் துவங்கப்பட்டது. இன்றைக்குச் சாலையில் வசிப்பவர்களை நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம். அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைப் பொருட்களாகவோ, ஆடைகளாகவோ, உணவாகவோ தொடர்ந்து கொடுத்து வருகிறோம். உதவி செய்துவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்று விடுகிறோம். நாங்களும் அவ்வாறு செய்திருக்கிறோம். சரி, ஒருநாள் அந்த மக்களுடன் அமர்ந்து பேசலாமே என்று நினைத்து பேசிய போது அவர்களின் வலியை எங்களால் உணர முடிந்தது. உலகத்தில் மிகப்பெரிய வலி நம்முடைய கஷ்டங்களைப் பிறரிடம் கூற, ஆள் இல்லாமல் இருப்பதுதான். அந்த வகையில் நாங்கள் சந்தித்தவர்கள் எல்லாம் அந்த மன நிலையிலேயே இருந்தவர்கள்தான்.
நாங்கள் இறந்தால் யார் எங்களை அடக்கம் செய்வார்கள் என்று எங்களிடம் கேட்டார்கள். அவர்கள் கேட்ட அந்த விஷயம் எங்களுக்கு மிகச் சரியாகப்பட்டது. ஏன் அந்த விஷயத்தை நாம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்தது. எனவே அவர்களுக்கு உதவிடும் நோக்கில் இதனை ஒரு 10 நபர்களோடு நாங்கள் ஆரம்பித்தோம். இன்று 500 தன்னார்வலர்கள் சென்னை முழுவதும் இருக்கிறார்கள். இளைஞர்களைக் கொண்டே இந்த அமைப்பு செயல்படுகிறது. இன்றைய இளைஞர்கள்தான் நாளைக்கு அப்பா, அம்மாவை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்கள். எனவே அவர்களுக்கு இவர்களின் வலியைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே இளைஞர்களை இதில் ஈடுபடுத்துகிறோம்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
எல்லா உதவிகளையும் நீங்கள் மட்டுமே செய்துவிட முடியாது, உங்களுக்கு காவல்துறை தரப்பில் இருந்து எந்த மாதிரியான உதவிகள் வருகின்றது?
சாலை ஓரம் இருப்பவர்கள் மட்டுமில்லாது அடையாளம் தெரியாமல் இறப்பவர்கள் முதலானவர்களையும் காவல்துறையினர் சிறிது காலத்திற்கு மார்ச்சுவரியில் வைத்திருப்பார்கள். ஒரு பதினைந்து நாள் அல்லது ஒரு மாதம் என்ற கால அளவிற்குப் பிறகுதான் இறுதிச் சடங்கு செய்வார்கள். முதலில் அவர்களோடு நாங்களும் சேர்ந்து உதவுகிறோம் என்ற அடிப்படையில்தான் அவர்களோடு இணைந்து உடல்களை அடக்கம் செய்தோம். தற்போது எங்களுக்கு என்று ஒரு ஆம்புலன்ஸ் இருக்கிறது. மருத்துவமனையில் யாரேனும் உயிரிழந்து அவர்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல வசதியில்லை என்றால், எங்களுடைய சொந்த செலவிலேயே அவர்களைக் கொண்டு சென்று அடக்கம் செய்வோம். இன்றைக்குச் சென்னையில் பெரும்பாலான காவல் நிலையங்களோடு எங்களுக்குத் தொடர்பு இருக்கிறது. யாருக்கேனும் உதவி தேவை என்றால் எங்கள் எண்களுக்கு அழைப்பார்கள். இதில் நாங்கள் மதம், ஜாதி பேதங்கள் என்று எதையும் பார்ப்பதில்லை.