Skip to main content

790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கல்வெட்டு! 

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Inscription with 790 year old

தூத்துக்குடி மாவட்டம், மடத்தூர் நெடுஞ்சாலை அருகே “பங்கய மலராள் கேழ்வன்…..’’ என்று தொடங்கும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 790 ஆண்டுகள் பழமையானக் கிணறு மங்கலச் சொற்களுடன், பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.  பி.ராஜேஷ் மடத்தூரில் பழமையானக் கமலைக் கிணறு இருப்பதாகக் கூறியதன் பேரில் தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் தவசிமுத்து மாறன் நேரில் அதனைப்பார்த்த பின்பு கூறியதாவது; தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில், பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றில் நானாதேசி என்போர் எல்லா நாடுகளுக்கும் கடல் வழி மற்றும் தரைவழியாகச்சென்று வணிகம் செய்பவர்கள். இவ்வூரின் பழைய பெயர் நானாதேசி நல்லூர் ஆகும். இப்பெயர் மருவி தற்போது மடத்தூர் என ஆகிவிட்டது. இத்தகைய வணிகக் குழுவினர் தங்களுக்கென பாதுகாப்பு வீரர்களையும் வைத்திருந்தனர். அதேபோல், பிராமணர்களுக்கு தானமாக ஒரு ஊரினை மங்கலம் என்ற பெயரில் உருவாக்கிக் கொடுத்து அதன் காவல் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. 

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த (கி.பி.1234) இந்தக் கல்வெட்டு இருபது வரிகளைக் கொண்டுள்ளது. 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இந்த ஊர் நானா தேசிநல்லூர் என்றழைக்கப்பட்டதைக் குறிப்பிடும் விதத்தில், தாமரைப்பூவில் வாசம் செய்யும் லட்சுமியின் மணாளன் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், மென் பாதராமன் சிவந்த சூரியனாக ஒளிவிடும், ராசன் நானாதேசி நல்லூரின் அரசன் ஆண்டு 1234 இல் கங்கை நீர் போல வற்றாத கிணற்றை, அமைத்திட உலகம் போற்ற உத்தரவிட்டான். என்றென்றும் மக்களுக்கு தண்ணீர் தருவதை இனிமையான தமிழால் கூறு என்ற பொருள்பட இக்கல்வெட்டு அமைந்துள்ளது.

Inscription with 790 year old

கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு  துலாக்கல் அல்லது ஏற்றம் என்றழைக்கப்படுகிறது. மக்களுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை நடைமுறையில் அப்பகுதிகளின் அரசனும் அவரது சார்பில் நிர்வாகிகளும் வணிகர்களும் உருவாக்கியுள்ளனர். கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறியமுடிகிறது. அரசன், கமலைக் கிணற்றையும், அமைத்துக் கொடுத்துள்ளார். இங்கு கிணறு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. சிறப்புமிக்க இந்த கல்வெட்டை சுற்றிலும் வேலி அமைத்துப் பாதுகாப்பது அந்த ஊருக்கு பெருமை தரும். இவ்வாறு கூறினார்.