Skip to main content

'அது எப்படிங்க... ஊழலிலும் முதலிடம் வளர்ச்சியிலும் முதலிடம்' - தமிழ்நாடு குறித்து டெல்லியில் எழுந்த கேள்வி - EX. IAS அதிகாரி ஞானராஜசேகரன் பேச்சு

Published on 15/05/2022 | Edited on 16/05/2022

 

Gnana Rajasekaran

 

முதல் மொழி சித்திரைத் திருவிழா என்ற இலக்கிய நிகழ்வு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானராஜசேகரன் பேசுகையில்,

 

”லஞ்சம் என்ற விஷயத்தை நான் எப்போது முதலில் சந்தித்தேன் என்று யோசித்து பார்க்கும்போது என்னுடைய கல்லூரி காலத்தில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஹாஸ்டலில் என்னுடன் இருந்த ஒரு பையனின் உறவினர் ஒருவர் போலீஸ் எஸ்.ஐ.யாக முயற்சி செய்துகொண்டிருந்தார். அதனால் அமைச்சர் ஒருவரின் பரிந்துரைக்காக ஊரில் இருந்து கிளம்பி குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். எனக்கு சென்னை ஏரியா நன்றாக தெரியும் என்பதால் அந்த அமைச்சரை சந்திக்க என்னையும் அழைத்துச் சென்றார்கள். அந்த அமைச்சரின் வீடு அண்ணா நகரில் இருந்தது.

 

நான் வெளியே நின்றுகொண்டேன். அவர்கள் மட்டும் உள்ளே சென்று பேசினார்கள். 25 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக வாங்கிக்கொண்டு அவரின் பெயரை ஒரு பேப்பரில் குறித்து வைத்துக்கொண்டார்கள். பின், அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டோம். ஆனால், எஸ்.ஐ. ரிசல்ட் வந்தபோது இந்தப் பையன் தேர்ச்சி பெறவில்லை. உடனே அவர்கள் ஊரில் இருந்து கிளம்பிவந்துவிட்டார்கள். மீண்டும் அந்த அமைச்சரை சந்திக்கச் சென்றோம். ஏதோ தகராறு நடக்கப்போகிறது என்றுதான் நான் நினைத்தேன். அந்த அமைச்சர் அப்போது இல்லை. அவரது உதவியாளரிடம் விஷயத்தைக் கூறியதும் எல்லா விவரங்களையும் சரி பார்த்துவிட்டு, அந்தப் பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டார். 

 

’நேர்மைனா இப்படித்தான்யா இருக்கணும்’ என்று அந்த அமைச்சரை காரில் வரும்போது இவர்கள் புகழ்ந்துகொண்டே வந்தார்கள். ’காசு வாங்குனார், காரியம் நடக்கல என்றதும் நேர்மையாக திருப்பிக்கொடுத்துட்டாரே...’ என்று அந்த அமைச்சரைப் பற்றி பெருமையாக பேசினார்கள். இன்றைக்கும் இதுதான் நேர்மை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

 

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் இருந்தபோது, ‘தமிழ்நாடு ஊழலும் முதலிடத்திலும் உள்ளது, வளர்ச்சியிலும் முதலிடத்தில் உள்ளது, இது எப்படி சாத்தியம்’ என்று எங்கு சென்றாலும் என்னிடம் கேட்பார்கள். அது உண்மைதான். ஊழல், வளர்ச்சி இரண்டலுமே தமிழகம் முன்வரிசையில் உள்ளது. பீகாரில் ஊழல் அதிகம். ஆனால், அங்கு வளர்ச்சியில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இது எப்படி சாத்தியம்? இது பற்றி ஆய்வு செய்தபோது ஒரு பெரிய உண்மை தெரியவந்தது. 

 

எப்போதுமே சிவில் சம்மந்தமான வேலைகளில்தான் அதிக ஊழல் நடக்கும். ஒரு ரோடு போட 100 ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றால் பிற மாநிலங்கள் ரோட்டில் முதலீடு செய்யும் காசைவிட தமிழ்நாட்டில் அதிக அளவு காசு ரோட்டில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது 100 ரூபாயில் 80 ரூபாய்வரை சாலைபோட பயன்படுத்துகிறார்கள். ஊழலே இல்லாத மாநிலம் என்று சொல்லப்படும் கேரளாவில்கூட 60 ரூபாய்தான் ரோட்டிற்காக செலவழிக்கிறார்கள். மீதமுள்ள பணத்தில் ஊழல் செய்யப்படுகிறது. எல்லா மாநிலங்களிலும் இதே மாதிரியான விகிதம்தான் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இது முக்கிய காரணம்.

 

அப்படியென்றால் ஊழலில் எப்படி தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. பிற மாநிலங்களில் அரசு பணத்தை அதிகமாக எடுத்துதான் அங்குள்ள அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அரசு பணத்தை பெரிய அளவில் எடுக்காமலே வேறு வகையில் ஊழல் செய்கிறார்கள். இதைத்தான் விஞ்ஞான ஊழல் என்கிறார்கள். அதாவது அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத வகையில் ஒரு லஞ்ச உலகத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒன்று இல்லை. என்னுடைய நண்பர் ஒருவருக்கு ஆளுங்கட்சியின் கோவை மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் பதவி ஒதுக்கப்படுகிறது. அதற்காக அவரிடம் ஒரு கோடி கேட்டார்கள். இவர் 75 லட்சம்வரை கொடுக்க தயாராக இருந்தார். ஆனால், பேரம் படியாததால் அந்தப் பதவி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதுபோல அரசாங்கம் சம்மந்தப்படாத விஷயங்களிலேயே பல வகையான லஞ்சத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஊழலில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்”. இவ்வாறு ஞானராஜசேகரன் பேசினார்.

 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.