Skip to main content

தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்...

Published on 03/08/2018 | Edited on 03/08/2018
mother feeding


 

மனிதகுலத்தின் மிகப்பெரிய மாமருந்து, பிறந்த குழந்தைகளுக்கான மிகச்சிறந்த உணவு தாய்ப்பால்தான். அதனால்தான் அதை திரவ தங்கம் என அழைக்கின்றனர். பொதுவாக குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குழந்தைகள் சிறப்பாக செயல்பட தாய்ப்பால் அவசியம் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. தாய்க்கும், குழந்தைக்குமான பாசத்தையும் இது பெருக்குகிறது. சர்வதேச அளவில் தாய்ப்பால் இல்லாமல் வருடத்திற்கு ஒரு கோடி குழந்தைகள் இறக்கின்றன. பசும்பாலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் அது குழந்தையின் உள்ளுறுப்புகளுக்கு அதிக வேலையை கொடுக்கும். பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய செயல்களில் இதுவும் ஒன்று. இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் தாய்க்கும் இது பல நன்மைகளை அளிக்கிறது.
 

 

 

தாய்ப்பாலால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளுக்கு நிகரான நன்மைகள் தாய்க்கும் ஏற்படுகிறது. மார்பக புற்றுநோய் உள்ள பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெரிதும் குறைகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இது குறைக்கிறது. கருவுற்று இருக்கும்போதும், குழந்தை பிறந்தவுடனும் தாயின் எடை கூடும், தாய்ப்பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் உண்மையில் தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் எடை குறையும், கருவுறுவதற்கு முன்பிருந்த உடல்வாகை திரும்பப்பெறுவார்கள். உண்மையில் தாய்ப்பால் சுரக்கும் அளவிற்கும், மார்பகத்தின் அளவிற்கும் சம்மந்தமே இல்லை. மார்பக திசுக்களின் எண்ணிக்கையும், அது தூண்டப்படும் விதமும்தான் தாய்ப்பாலின் அளவை நிர்ணயிக்கின்றன. அதனால் தாய்மார்கள் பயப்பட தேவையில்லை. மாதவிடாய் ஏற்படும் காலத்தை தாமதப்படுத்துகிறது, இரத்த இழப்பையும் சரிசெய்கிறது.
 

 

 

உளவியல் ரீதியான பல காரணங்களும் உள்ளன. தாய்க்கும், சேய்க்குமான உறவு வலுப்படும், மனநிம்மதி கிடைக்கும். இப்படி தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல தாய்மார்களுக்கும் பல நன்மைகள் உண்டாம். இந்த விஷயத்தில் ஆண்கள் உணர வேண்டியதும் இருக்கிறது. ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதென்பது மிக இயல்பான, தேவையான ஒரு செயல். அவள் அதை எந்த இடத்திலும் கொடுப்பதற்கான சங்கடமின்மையை ஆண்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு, பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் மையங்களை அமைத்திருக்கிறது. இருந்தாலும் அவை கூட தேவையில்லாத அளவுக்கு மனமாற்றம் வேண்டும். சமீபத்தில் கேரள பத்திரிகை ஒன்றில் ஒரு பெண் தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம் அட்டைப்படமாக வந்தது. அதற்கு எழுந்த எதிர்ப்பும் சர்ச்சைகளும் அந்த மனமாற்றம் ஏற்படவில்லை என்பதை காட்டுகின்றன.