Skip to main content

இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

SUSHIL KUMAR

 

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார். இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் இரண்டு முறை இவர் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இவருக்கும்,  மற்றொரு மல்யுத்த வீரரான சாகர் ராணா தான்கட்டுக்கும் இடையே மோதல்போக்கு இருந்து வந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு சாகர் ராணா தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் சத்ராஸல் அரங்கில் மோதல் வெடித்தது.

 

இதில் சுஷில் குமார் தரப்பு, சாகர் ராணா தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. சுஷில் குமார் தரப்பு தாக்கியதில் படுகாயமடைந்த சாகர் ராணா தன்கட், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சுஷில் குமார் மீது போலீஸார் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர். சுஷில் குமார் இதுவரை போலீஸாரிடம் பிடிபடாத நிலையில், பல்வேறு மாநில போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

 

இருப்பினும் அவர் இருக்குமிடம் தெரியாததால், அவரை டெல்லி காவல்துறை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, அவர் பற்றி துப்பு கொடுப்பவருக்கு ஒருலட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.